பெண்

image courtesy :pexels.com

உலகின் கருவை சுமந்து
உதிரத்தில் உயிரை உருவாக்கி
தான் வித்திட்ட உயிரை விருட்சமாய்
மாற்றி ஏற்றம் தந்து மாற்றத்துக்கு
வித்தானவளே வீரமங்கையே

பால் சுரக்கும் மார்பு வற்றிய
பின்பும் குழந்தை அழுகுரல் கேட்டால்
கண்ணீராய் பால் வார்க்கும் மாதரசியே

காட்டு வேலையோ வீட்டு வேலையோ
உடலை வருத்திச் செய்தாலும்
ஒற்றைச் சிரிப்பில் ஒன்றும் இல்லை
என்று கடந்து செல்லும் கலையரசியே

ஒன்றோ இரண்டா இருப்பதை
வைத்து சமைத்தாலும் உப்பு சப்பு
பார்க்கவே முதல் கை எடுப்பாள்
மிச்சம் மீதி இருந்தால் தான்
தன் பசி உணர்வாள்
அவள் அன்னபூரணியே

கோபத்தில் முகம் சுளித்தாலும்
சோகத்தில் மடி தந்து
அலையும் மனதிற்கு
மருந்தாகும் மருத்துவச்சியே

பலரின் வாழ்க்கைக்கு வண்ணமடிக்க
இருண்ட அறையில் இருந்தே
வெளிச்சம் தந்த கலங்கரை விளக்கே

எங்கிருந்தோ வந்து
என் அப்பன் வீட்டில்
புகுந்த சொந்தக் கடலைத்
திரும்பாத வந்த கரையை
தனதாக்கிக் கொண்ட
அலை அவள் பெண்ணவள்
என் தாயும் அவளே..!!

– தமிழ்செல்வன் இரத்தினம்