
இடுகாடு இளித்தது
—————————-
மவனே,
எங்கு வேண்டுமானாலும்
எவ்வளவு வேண்டுமானாலும்
மண்ணாய் வாங்கு…
இறுதியில்
உன் வாய்க்கு போடுவது
என்னிடத்து மண்ணே என்று
இடுகாடு இளித்தது.
************
எதிர்பார்த்தல்
——————–
உன்
எதிர்பார்த்த லெதுவோ…?
அதுவேதான்
பிறர்க்கும்…
அதற்காக நீஎன்ன செய்தாய்…?
என்றுனை நீயே
கேட்டுப்பார்… பின்
அறியும் நீ
செய்தது சரியாவென…
திருந்து அல்லாது
திருத்திக்கொள்…!
************
விதை
———
“விதை நான் போட்டது”
என்றுரைப்பதை விடுத்து
என்ன விதையென்பதை கூறு…
நல்விதையெனில் நல்லதே அமையும்,
கெடுவிதையெனில் கேடே விளையும்…
வாழ்வும் அப்படியே…
நாம் என்ன கொடுக்கிறோமோ
அதுவே நமக்கும் கிடைக்கும்…

************
படைப்பாளர் : பழ.சா
புகைப்படங்கள் : காந்தி சங்கர்