வேடிக்கை

உன் முகத்தில் முகாமிட்டவுடன்

முழுவண்ணம் கொண்டுவிடுகிறது மஞ்சள்.


செம்பருத்திக்கும் 

மல்லிகை வாசம் 

வந்துவிடுகிறதுன்

கூந்தல் ஏறியவுடன்.


நீ வரும் போது மட்டும்

இராஜபாட்டையில் வரும்

தேர் போல் பயணிக்கிறது

மினிபஸ்.


நீ தூக்கி இறுக அணைப்பதால்

குழந்தை என்றெண்ணி

உன் மார்போடு விளையாடுகிறது

பத்து ரூபாய் லாங் சைஸ் நோட்.


உன் பல்லும் உதடும்

படட்டும் என்று

வேண்டுமென்றே

மூடி இறுகிக் கிடக்கிறதுன்

தக்காளி சாத டப்பா.


நான் பொறாமை கொள்ளும்

இன்னோர் உயிர்

உன் விரல் பிடித்து சுற்றும்

அந்த காம்பஸ்.


நீ நடக்கும் தெருக்களில் மட்டும்

வேண்டும் என்றே கண்ணடிக்கிறது

நகராட்சி மின்விளக்குகள்.


இதையெல்லாம் நான்

வேடிக்கை மட்டுமே பார்க்கிறேன்

உன்னை மேலும் அழகாக்குவதால்.

படைப்பாளர் : கவிஞர் ரகுராமன்