
ஞாயிறு மாலை ..
இனியதொரு வேளை..
பறம்பின் உறவுகளாம் ..
பாரியின் பங்காளிகளோடு..
பொற்கால இந்தியாவின் ..
எழுபத்தைந்து வருட
சுதந்திர வரலாற்றில் …
பெண்களின் சுதந்திரம்
என் பார்வையில் ..!
தந்திர பூமியில்
சுதந்திரத்தை எங்கு தேட ?
மாந்திரீக மானுடத்தில்
மனித நேயத்தை எங்கு தேட?
அவசர அரசாங்கம் ..
மிக அவசர அரசாணை ..
அனிதாக்கள் ஆற்றாமையில்
சித்ராக்கள் சந்தேகத்தில்
சிந்துக்கள் சில துணுக்கு
பல வரா கணக்கு.. !
எங்கே தேட என் குல மாந்தரின்
சுதந்திரத்தை !
ஊர் எல்லை தாண்டாத
ஏனைய கிராமத்து பெண்கள்..
உலகம் சுற்றும்
அறிவார்ந்த மங்கையர்கள் ..
இன்டர்நெட் அலசும்
இன்னொரு கூட்டம் ..
ராகங்கள் பதினாறு..
ரகங்கள் பலநூறு ..
துருவங்கள் இரண்டல்ல
இடைவெளி ஏராளம் !
எப்படி ஒப்பிட
எது சுதந்திர இந்தியாவென ?
இரவில் பெண் தனியாக
நடக்கட்டும் – காந்தி
நிமிர்ந்த நன்னடை
திமிர்ந்த ஞானச் செருக்கு – பாரதி
அடுக்கலாம் ஆயிரங்கள் ..
அடைந்தவர்கள் ஆயிரத்தில் ஒருவர்.
இரவா … பகலா …
ராவணனா … காலாவா..
சினிமாக்கள் சித்தரிக்கும் – நம்
நினைவுகளும் சிலாகிக்கும் …
பெண் சுதந்திரமோ – இன்றளவில்
மண்ணை பிளக்கும்
முதல் இலை அல்ல !
மனதடியில் மறைந்தே
வளரும் வேர் என்று !
வேங்கையாய் சீறட்டும்
சுனாமியாய் சுழலட்டும்

பட்டி தொட்டி எல்லாம்
சுதந்திர வேட்கை தீ
பரவட்டும் …
ஆசை அறிதல் தரும் !
அறிதல் புரிதல் தரும் !
புரிதல் தேவை தரும் !
தேவை தேடல் தரும் !
தேடல் விடியல் தரும் !
இருபதில் இருமடங்கு
பண்படட்டும் நம் பெண்கள் ..
முப்பதில் முயலட்டும்
விருப்பும் துறையனைத்தும்.
நாற்பதில் நாடாளட்டும்
நம் குல விளக்குகள் .
ஐம்பதில் அனுபவம்
பகிரட்டும் அடுத்த
தலை முறைக்கு !
செல்வங்கள் சேர்க்கட்டும்
சொந்தங்கள் மறவாமல் ..
நடுநிலை அடை மழையில்
சமூகம் சங்கமிக்கட்டும்…
ஆணும் பெண்ணும்
வெற்றிகளை கொண்டாடட்டும் !
அகம்பாவம் வேண்டாம்
பரிதாபம் வேண்டாம்
அடங்கவும் வேண்டாம்
அடக்கவும் வேண்டாம்
ஆடவும் வேண்டாம்
ஆணவமும் வேண்டாம்
அன்பால் அகம் அளப்போம் …
அனைவரும் சுதந்திரம் சுவாசிப்போம் !!
ஜெய் ஹிந்த் !!!
படைப்பாளர் : முரசொலி
புகைப்படம் : பிக்ஸல் யோகேந்திர சிங்